ஆணுறைக்குள் போட்டு விழுங்கி ரூ.60 லட்சம் வைர கற்கள் கடத்தி வந்த வாலிபர் கைது

சென்னைக்கு நூதன முறையில் கடத்தி வந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2017-07-15 22:15 GMT
ஆலந்தூர்,

ரூ.60 லட்சம் மதிப்புள்ள வைர கற்களை ஆணுறைக்குள் போட்டு விழுங்கி வயிற்றுக்குள் மறைத்து வைத்து இலங்கையில் இருந்து சென்னைக்கு நூதன முறையில் கடத்தி வந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த விமானத்தில் இருந்து இலங்கையை சேர்ந்த முகமது இர்பான்(வயது 32) என்பவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்து இருந்தார்.

அவரது உடமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை. அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவரது வயிறு பெரிதாக இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், டாக்டர்களை வரவழைத்து அவரை பரிசோதனை செய்தனர். அதில் முகமது இர்பானின் வயிற்றில் ஏதோ ஒரு பொருளை மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வயிற்றில் உள்ள பொருளை வெளியே எடுப்பதற்காக அவருக்கு ‘இனிமா’ கொடுத்தனர்.

சிறிது நேரத்தில் அவரது வயிற்றுக்குள் இருந்து ஆணுறை வெளியே வந்தது. அதை பிரித்து பார்த்த போது 18 வைர கற்கள் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும்.

முகமது இர்பான், வைர கற்களை ஆணுறைக்குள் போட்டு வாயில் விழுங்கி, வயிற்றுக்குள் மறைத்து வைத்து நூதன முறையில் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து முகமது இர்பானை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரிடம் இருந்து 18 வைர கற்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் இலங்கையில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்திறங்கிய சென்னையை சேர்ந்த சம்சுதீன் (37) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.9 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் கொண்ட 3 தங்க கட்டிகளை கைப்பற்றினார்கள்.

வைர கற்களை கடத்தி வந்ததாக கைதான முகமது இர்பான் மற்றும் தங்க கட்டிகள் கடத்தி வந்த போது பிடிபட்ட சம்சுதீன் இருவரிடமும் வைரம் மற்றும் தங்கத்தை யாருக்காக சென்னைக்கு கடத்தி வந்தனர்? என சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்