வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-10-17 21:45 GMT
சென்னை,

சென்னையில் உள்ள குடும்பநல கோர்ட்டில் இளம்பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், ‘நான் குமார் என்பவருடன் வக்கீல் ஒருவரின் அலுவலகத்துக்கு சென்று இருந்தேன். அங்கு என்னிடம் சில ஆவணங்களில் வக்கீல்கள் கையெழுத்து பெற்றனர். இந்தநிலையில் வக்கீல்கள் முன்னிலையில் எனக்கும், குமார் என்பவருக்கும் திருமணம் நடந்ததாக கூறி அதை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கை குடும்பநல கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அந்தப்பெண் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் விசாரித்தனர். குமார் தரப்பில் வக்கீல் பி.ஆனந்தன் ஆஜராகி வாதாடினார்.

அப்போது அவர், ‘வழக்கு தொடர்ந்துள்ள இளம்பெண்ணுக்கும், குமாருக்கும் வக்கீல்கள் முன்பாக திருமணம் நடந்தது. பின்னர் திருமணத்தை அவர்கள் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டனர். இந்து திருமண சட்டப்படி 2 நபர்கள் முன்பு ஒரு ஆணும், பெண்ணும் சீர்திருத்த முறைப்படி திருமணம் செய்துகொண்டால் அது செல்லுபடியாகும்.

அந்த 2 நபர்கள் நண்பர்கள், உறவினர்கள், வேறு சிலராகவும் இருக்கலாம் என்று சட்டம் கூறுகிறது. அந்த வேறு சிலரில் வக்கீல்களும் உள்ளடங்குவர். எனவே, மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்’ என்றார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

கீழ் கோர்ட்டில் நடந்த குறுக்கு விசாரணையின் போது, தனக்கும், குமார் என்பவருக்கும் வக்கீல் அலுவலகத்தில் வைத்து திருமணம் நடந்ததாகவும், வக்கீல்கள் முன்பு நடந்த திருமணம் செல்லாது என்றும் அந்தப்பெண் கூறி உள்ளார். இதற்கு நேர் எதிரான கருத்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் அந்தப்பெண் கூறி உள்ளார்.

எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். திருமணம் நடந்தது தொடர்பாக வக்கீல் கொடுத்த கடிதம் இந்து திருமணம் சட்டத்துக்கு புறம்பானது அல்ல. வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்