சென்னையில் மழை; வருகிற 25-ந்தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

வருகிற 25-ந்தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2017-10-22 08:45 GMT

சென்னை, 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாத காலங்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் காலமாகும். தமிழக நீர் ஆதாரத்தின் முக்கியமான அம்சமாக வடகிழக்கு பருவமழை கவனிக்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக அளவு மழை கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20–ந்தேதி முதல் 25–ந்தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் ஏற்படும். 

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவது தாமதம் ஆக அதிக வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தற்போது வெப்பசலனம் காரணமாக சென்னையின் சுற்றுப்புறங்களில் மழை பெய்து வருகிறது. 

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:- வெப்ப சலனம் காரணமாக அடுத்து 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக போளூரில் 10 செ.மீ., சிவகங்கையில் 8 செ.மீ., பேச்சிப்பாறையில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. வருகிற 25-ந்தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறி னார். சென்னையில் கடந்த 2 நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று மதியம் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

மேலும் செய்திகள்