நடிகர்களை வளைத்துப்போட்டு தமிழகத்தில் கால் ஊன்ற பா.ஜனதா முயற்சிக்கிறது தொல். திருமாவளவன் பேட்டி

ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட நடிகர்களை வளைத்துப்போட்டு தமிழகத்தில் பா.ஜனதா கால் ஊன்ற முயற்சிக்கிறது என்று தொல். திருமாவளவன் கூறினார்.

Update: 2017-10-22 19:52 GMT
செம்பட்டு,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேற்று திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது வேதனை அளிக்கிறது. டெங்கு தொடர்பாக தமிழகத்தில் ஆய்வு நடத்திய மத்திய சுகாதார குழு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

டெங்கு காய்ச்சல் பிரச்சினையை திசை திருப்புவதற்காகவே தற்போது மெர்சல் படம் பற்றிய சர்ச்சையை கையில் எடுத்துள்ளதாக எண்ணத்தோன்றுகிறது. நான் அந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை. அதில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை.

ஜோக்கர் என்று ஒரு முழு நீள அரசியல் விமர்சன காமெடி படம் வந்தது. அந்த படத்தை பற்றி விமர்சிக்காதவர்கள் தற்போது மெர்சல் படத்தை விமர்சிப்பதால் இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது.

இந்த படம் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளிவந்து உள்ளது. தணிக்கை குழுவில் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டியவர்களே உறுப்பினர்களாக உள்ளனர். மெர்சல் படத்தில் மத்திய அரசின் நன்மதிப்பை கெடுக்க கூடிய வசனங்கள் எதுவும் இல்லை. எனவே மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு இந்த படத்தை எதிர்ப்பது போல் மறைமுகமாக ஆதரவு தேடி தர இருக்கிறது. விமர்சிப்பதை போல் ஊக்கம் அளிக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அரசியலில் ஆர்வம் காட்டும் ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்களை வளைத்துப் போட்டு அவர்கள் மூலம் தமிழகத்தில் கால் ஊன்ற பாரதீய ஜனதா கட்சி முயற்சிக்கிறது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வேதனையோடு சுட்டிக்காட்டுகிறது.

நீட் தேர்வுக்கு எதிராக மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் எந்தவித அரசியலும் இல்லை. மாணவி அனிதா குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும். அதே நேரத்தில் மாநில அரசு அளிக்கும் நிதி உதவி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்