அரசியல் பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை நிறைவேற்றவேண்டியது எனது கடமை விவேக் பேட்டி

அரசியல் பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை நிறைவேற்றவேண்டியது தனது கடமை என சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவியின் தலைமைச் செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் கூறியுள்ளார்.

Update: 2017-11-21 08:56 GMT
சென்னை

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசி கலாவின் உறவினர் களின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் என பல இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினார்கள். சோதனையை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ‘சம்மன்’ அனுப்பி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு  வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் பின் வருமான வரித்துறை அதிகாரிகள், இளவரசியின் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக்கின் தங்கை ‌ஷகிலா, ஜெயலலிதாவிடம் முன்பு உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோரை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கு சோதனையும் நடத்தப்பட்டது.

இது குறித்து இந்து ஆங்கில பத்திரிகைக்கு விவேக் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

அரசியல் பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை நிறைவேற்றவேண்டியது தனது கடமை என சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவியின் தலைமைச் செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் கூறியுள்ளார்

வருமானவரி சோதனை வழக்கமான நடைமுறை. வழக்கு அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் போதுதான் அரசியல் நோக்கம் ஏதாவது இருந்ததா என தெரியவரும்.

ஜாஸ் சினிமாஸ் மற்றும் ஜெயா டிவியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளை வேறு ஒரு பொறுப்பு வழங்கப்பட்டால் அதை செய்யவேண்டியது எனது கடமை .

ஜெயலலிதாவின் மரணம் பல விஷயங்களை மாற்றி உள்ளது. தாம் முன்பு போல் மகிழ்ச்சியாக இல்லை. மக்கள் நேர்மையாக நடந்துகொள்கிறார்களா இல்லையா என்பதை தன்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. நிறைய பேர் தம்முடன் பழகும் முறையை மாற்றிக்கொண்டுள்ளனர்.

தான் வளர்ந்த முறையால் மற்றவர்களின் அணுகுமுறையிலிருந்து தனது அணுகுமுறை மாறுபட்டிருக்கக்கூடும் என்றாலும், தான் மன்னார்குடி குடும்பத்தின் ஒரு அங்கம்தான் என்றும் விவேக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்