சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- #TNAssembly
சென்னை,
நம் நாட்டில் உள்ள மாநில சட்டமன்றங்கள் வருடத்திற்கு 90 நாட்கள் இயங்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சாசனத்தை மறுசீராய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி கமிட்டி கூறியிருக்கிறது. எனவே, இந்த 90 நாட்களாவது சட்டமன்றத்தை இயக்க வேண்டியது ஆளும் ஆட்சியாளர்களின் கடமை. ஆனால், தமிழக சட்டசபை சராசரியாக வருடத்திற்கு 35 நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதற்கு ஆளும் கட்சிக்கு எதிர் வரிசையில் அமைந்துள்ள கேள்வி கேட்கும் அரசியல் கட்சிகளால் எழும் குழப்பங்கள், கூச்சல்கள் ஒருபுறம் என்றால் ஆளும் கட்சியும் சட்டமன்றத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
எனவே, இனிவரும் காலங்களிலாவது சட்டமன்றம் கூடுவதற்காக பரிந்துரைக்கப்பட்ட நாட்களில், அதாவது வருடத்திற்கு 90 நாட்கள் நடைபெற வேண்டும் என்பது மட்டுமல்ல, தேவைப்பட்டால் அந்த 90 நாட்களுக்கு மேலும் சட்டமன்றத்தை கூட்டினால் நல்லது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.