இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 70 சதவீத பிரசவம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ‘அ.தி.மு.க. உறுப்பினர் நீதிபதி, உசிலம்பட்டி தொகுதி செல்லம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த அரசு ஆவனம் செய்யுமா? என்று கேட்டார்.

Update: 2018-06-13 23:45 GMT
சென்னை,

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் இதற்கு பதிலளித்து  கூறியதாவது:-

செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு மிக சிறப்பாக செயலாற்றி வருகிறது. அப்பகுதி மக்கள் அந்த ஆஸ்பத்திரியில் மேலும் வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரினாலும், அதற்குரிய ஆய்வுகளை செய்து, அந்த வசதிகள் செய்து தரப்படும்.

இந்தியாவிலேயே 70 சதவீதம் பிரசவங்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் நடைபெறக்கூடிய ஒரே மாநிலம் நம் தமிழ்நாடு. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கருவுற்ற பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு 16 பொருட்கள் கொண்ட அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் போன்றவற்றை வழங்குகின்ற காரணத்தினால் இந்த நிகழ்வுகள் எல்லாம் மிகச்சிறப்பாக நடைபெறுகின்றன.

செல்லம்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தனி வார்டு மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை உடனடியாக இந்த நடப்பாண்டிலேயே கட்டி தருவதற்கு ஆவன செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்