முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சேவல் கோதண்டராமன் உடல் நல குறைவால் காலமானார்
முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சேவல் கோதண்டராமன் உடல் நல குறைவால் இன்று காலமானார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த முகையூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ சேவல் கோ.கோதண்டராமன் (வயது 67). இவரது சொந்த ஊர் முகையூர் அருகே உள்ள கொடுங்கால் கிராமம். இவருக்கு சுசீலா என்ற மனைவி உள்ளார்.
கடந்த 2001-ம் ஆண்டு முகையூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சேவல் கோ.கோதண்டராமன் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பொன்முடியிடம் தோல்வி அடைந்தார்.
உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட இவர் சென்னை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் இவரது உடல் நிலை மோசமடைந்து உள்ளது. தொடர்ந்து அளித்து வந்த சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை காலமானார்.
அவரது உடல் இன்று மாலை சொந்த ஊரான கொடுங்கால் கிராமத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.