மாணவர் சேர்க்கை குறைந்ததால் அரசு முடிவு பட்டதாரிகளும் ஆசிரியர் பயிற்சியில் சேர அனுமதி 17–ந்தேதி கடைசி நாள்

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர சமீப காலமாக மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது.

Update: 2018-07-09 21:45 GMT
சென்னை,

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர சமீப காலமாக மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. எனவே ஆசிரியர் பயிற்சி முடித்த பலர் வேலைவாய்ப்பு இன்றி சிரமப்படுகிறார்கள். எனவே ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

நடப்பு கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சியில் சேர பிளஸ்–2 முடித்த மாணவ, மாணவிகள் 821 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். அதில் கலந்தாய்வு நடத்தப்பட்டதில் 413 பேர் மட்டுமே ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தனர்.

அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததால் அரசு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி பட்டதாரிகளும் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து பயில அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் சேர்ந்து பயில விரும்புவோர் நாளை(புதன்கிழமை) முதல் (www.tnscert.org) என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வருகிற 17–ந்தேதி கடைசி நாள் ஆகும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்