திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர்விமான பயணிகள் 70 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை

திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 70 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

Update: 2018-08-05 21:30 GMT
திருச்சி

திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 70 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினார்கள். ஏற்கனவே சுங்க சோதனை முடிந்து வெளியே வந்தவர்களையும் திரும்ப உள்ளே அழைத்து சென்று விசாரித்தனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மாலை 5.30 மணிக்கு ஏர்– இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து வந்தது. அந்த விமானத்தில் மொத்தம் 70 பயணிகள் இருந்தனர்.

விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கியதும் அவர்களது பாஸ்போர்ட்டு, குடியுரிமை தொடர்பான ஆவணங்களை சரிபார்க்கும் பணிகளை அதிகாரிகள் செய்து கொண்டிருந்தனர். அவர்களில் 20 பேர் சுங்க சோதனை முடிந்து வெளியே வந்தனர்.

அப்போது அங்கு திடீரென வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 11 பேர் அவர்களை சூழ்ந்து கொண்டு, அப்படியே மீண்டும் விமான நிலையத்தின் உள்ளே அழைத்து சென்று, அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அதே நேரத்தில் அந்த விமானத்தில் இருந்து இறங்கிய மற்ற பயணிகளையும் வெளியே விடாமல் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணிகள் 70 பேரையும் வெளியே விடாமல் சி.பி.ஐ. அதிகாரிகள் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள பயணிகளின் பெயர் விவரம், அவர்களை சுற்றி வளைத்து திடீர் என விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதற்கான காரணம் எதனையும் அதிகாரிகள் வெளியிட வில்லை.

 மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கடத்தல் தங்கம் எதுவும் சிக்கியதா? என்றும் தெரியவில்லை.

 கடந்த 3 நாட்களுக்கு முன் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 6½ கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விமான நிலையத்தின் ஒப்பந்த ஊழியர்கள் 3 பேரையும் அதிகாரிகள் பிடித்து சென்றனர்.

இந்த நிலையில் தான் தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னையில் இருந்து நேரடியாக திருச்சி விமான நிலையத்திற்கு வந்து 70 பயணிகளிடம் அதிரடி விசாரணை மற்றும் சோதனை நடத்தினார்கள்.

சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த திடீர் வருகை திருச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கோ, சுங்க இலாகா அதிகாரிகளுக்கோ அவர்கள் விசாரணையை தொடங்கும் வரை தெரியாது. அவர்களது வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. இரவு 8 மணிக்கு மேலும் விசாரணை தொடர்ந்தது.

மேலும் செய்திகள்