குட்கா ஊழல் சிபிஐ சோதனை: ”குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார்” அமைச்சர் விஜயபாஸ்கர்
குட்கா ஊழல் சிபிஐ சோதனை குறித்து தற்போதும் சொல்கிறேன் எனக்கு மடியில் கனமில்லை எனவே வழியில் பயமில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். #VijayaBaskar
சென்னை,
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக தமிழகத்தில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீடு, சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 40 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிஐ சோதனை நிறைவு பெற்றதை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில்,
இன்று நடைபெற்ற சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார். குட்கா முறைகேடு தொடர்பாக என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார்கள். குட்கா தொடர்புடைய மாதவ்ராவ் என்ற நபரை நான் நேரடியாகவோ, மறைமுகமாகவே சந்திக்கவில்லை. எனக்கு மடியில் கனமில்லை எனவே, வழியில் பயமில்லை, இந்த பிரச்சினையை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொண்டு வெளி வருவேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.