கோடை சீசன்: ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை நாளை முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றம்

கோடை சீசனையொட்டி ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை நாளை முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.

Update: 2024-04-26 15:23 GMT

ஊட்டி,

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் விளங்குகிறது. இங்கு நிலவும் சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்க பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.

இதமான காலநிலையை அனுபவிக்க ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கடந்தாண்டு கோடை சீசனில் 10 லட்சம் பேர் வருகை தந்தனர்.

இந்த நிலையில், கோடை சீசனையொட்டி நாளை (சனிக்கிழமை) முதல் மே மாதம் இறுதிவரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கூடலூரில் இருந்து ஊட்டிக்கு வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பேருந்துகள், வேன் உள்ளிட்ட வாகனங்கள் எச்பிஎப், கோல்ப்ஸ் சாலை பகுதியில் நிறுத்தப்படும். அதில் வரும் சுற்றுலா பயணிகள் அரசு சுற்றுப்பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மசினகுடியில் இருந்து கல்லட்டி வழியாக ஊட்டி வரும் இலகு ரக வாகனங்கள் தலைக்குந்தா மட்டம், கோழிப்பண்ணை, புதுமந்து வழியாக ஸ்டீபன் தேவாலயம் வந்தடையும். அதில் தாவரவியல் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகள் புதுமந்தில் இருந்து வண்டிச்சோலை வழியாக தாவரவியல் பூங்கா வரலாம்.

கூடலூரில் இருந்து ஊட்டி படகு இல்லம் மற்றும் கர்நாடகா பூங்கா வரும் சுற்றுலா பயணி வாகனங்கள் பிங்கர்போஸ்டில் இருந்து வலதுபுறம் திரும்பி காந்தல் முக்கோணம் வழியாக படகு இல்ல சாலை மற்றும் கர்நாடகா பூங்கா சாலையை அடையலாம்.

குன்னூரில் இருந்து ஊட்டி வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பஸ்கள், வேன்கள், ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சுற்றுலா பயணிகள் அரசு சுற்று பேருந்ைத பயன்படுத்திக் கொள்ளலாம். கோத்தகிரியில் இருந்து ஊட்டி வரும் அனைத்து வாகனங்களும் கட்டபெட்டு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு குன்னூர் வழியாக வரவேண்டும்.

பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் தவிர அனைத்து கனரக வாகனங்களும் நாளை (சனிக்கிழமை) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் கோடை விழாவான 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊட்டி நகருக்குள் வர அனுமதி கிடையாது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக ஊட்டிக்கும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாகவும் செல்ல வேண்டும். ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் கமர்சியல் சாலையில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் தங்களது நான்கு சக்கர வாகனத்தை கடை எதிரே நிறுத்தக்கூடாது அதற்கு பதிலாக இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்