துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி சென்னை தொழிலாளி கொலை கட்டிலில் இருந்து விழுந்ததாக நாடகமாடிய மனைவி கைது

துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தொழிலாளியை கொலை செய்துவிட்டு, கட்டிலில் இருந்து விழுந்ததாக நாடகமாடிய அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-22 20:06 GMT
அரக்கோணம், 

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள மோசூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 30). சென்னையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லட்சுமி (27). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. கோகுல் (8), சூர்யா (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

பிரபுவுக்கும் லட்சுமிக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டது. பின்னர் பிரபு வீட்டில் படுத்து தூங்கிவிட்டார்.

நள்ளிரவு 1 மணிக்கு லட்சுமி பக்கத்து வீட்டில் உள்ளவர்களை எழுப்பி எனது கணவர் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து மயக்கமடைந்துவிட்டார். அவரை மருத்துவ மனைக்கு தூக்கிச்செல்ல வேண்டும் என்று கூறினார். உடனடியாக அவர்கள் பிரபுவை ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், பிரபு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பிரபு சாவில் சந்தேகம் அடைந்த போலீசார், லட்சுமியிடம் விசாரணை நடத்தி னர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார்.

இதையடுத்து லட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தியபோது அவர் தனது கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து லட்சுமி போலீசாரிடம் கூறியதாவது:-

எனது கணவர் தினமும் என்னை அடித்து துன்புறுத்தி வந்தார். நேற்று முன்தினம் அதேபோல் அடித்து துன்புறுத்தியதால் என்னால் வலி தாங்கமுடியவில்லை. இதனால் துப்பட்டாவால் பிரபுவின் கழுத்தை இறுக்கினேன். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். நள்ளிரவில் எனது கணவர் கீழே விழுந்து மயக்கமடைந்தார் என்று கூறி நாடகமாடி அக்கம், பக்கத்தில் இருந்தவர்களை நம்பவைத்து தப்பிக்க முயற்சித்தேன்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து லட்சுமியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்