வெடிபொருள் விபத்துகளை தடுக்க முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
காரியாப்பட்டி வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி ஆவியூரில் கல் குவாரி குடோன் வெடித்து சிதறி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாமல் வெடி பொருட்களை நகர்த்தியதே விபத்திற்கு காரணம் என செய்திகள் வருகின்றன.
கடந்த சில வருடங்களில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்துகளில் 93 பேர் உயிரிழந்ததாக சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தொடர்ச்சியான விபத்துகள் நடந்தும் தி.மு.க. அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இதுபோன்ற தொடர் விபத்துகளும் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்புகளும்.
வெடிபொருள் விபத்துகளை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும், இவ்விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்தோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.