வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் வாழ்வு சான்றிதழை இனி கருவூலங்களில் அளிக்க வேண்டும் தமிழக அரசு அறிவிப்பு

வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களின் வாழ்வு சான்றிதழை இனி கருவூலம் அல்லது சார் கருவூலங்களில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2018-11-08 21:47 GMT
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் ஓய்வூதியர்களில் சிலர், பொதுத்துறை வங்கி திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு வரை வங்கிகளில் நேரடியாக ஓய்வூதியம் பெற்று வந்தனர். அந்த ஓய்வூதியர்கள் இதனால் பல சிரமங்களை சந்தித்து வந்தனர்.

அவர்களுடைய சிரமங்களை குறைத்து அவர்களின் நலன் காக்கும் பொருட்டு, பொதுத்துறை வங்கி திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறும் சுமார் 70 ஆயிரம் தமிழக அரசின் ஓய்வூதியர்கள், தமிழக அரசின் ஆணைப்படி இந்த ஆண்டு முதல் அவர்கள் கருவூலத்துறை மூலமாக ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

அவர்கள் தற்போது தமிழகத்தில் உள்ள மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை அலுவலகங்களின் மூலமாக ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

கருவூலங்களில்...

மேலும் பொதுத்துறை வங்கி திட்டத்தில் உள்ள தமிழக அரசு ஓய்வூதியர்கள், கடந்த ஆண்டு வரை நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தங்களது வாழ்வு சான்றிதழை தாங்கள் ஓய்வூதியம் பெற்று வந்த வங்கிகளில் அளித்து வந்தனர்.

தற்போது அந்த ஓய்வூதியர்கள், அனைத்து பதிவேடுகளும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், கருவூலங்களுக்கு மாற்றப்பட்டு விட்டதால், இந்த ஆண்டுக்கான தங்களது வாழ்வு சான்றிதழை தங்கள் ஓய்வூதியம் பராமரிக்கப்படும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை மற்றும் மாவட்ட கருவூலங்கள் அல்லது சார் கருவூலங்களில் வருகிற 1.4.2019 முதல் 30.6.2019 வரை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்