நெல்லை அருகே 6 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை

நெல்லை அருகே, 6 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-11-17 20:45 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் பாலம்மாள் (23). இவருடைய கணவர் பரப்பாடி அருகே உள்ள சடையநேரியை சேர்ந்த சண்முகசுந்தரம். இவர்களுக்கு பிறந்து 6 மாதமே ஆன பாலகுமாரன் என்ற குழந்தை இருந்தது.

நோயின் காரணமாக சண்முக சுந்தரம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து பாலம்மாள் தனது குழந்தையுடன் பிள்ளையார்குளத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

கணவர் இறந்த நாள் முதல் விரக்தி அடைந்த நிலையில் இருந்து வந்த பாலம்மாள் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு தனது குழந்தையுடன் சென்றார்.

அங்கு குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் தான் கொண்டு வந்திருந்த கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பாலம்மாள் இறந்த தகவல் அவரது சகோதரர் மணிகண்டனுக்கு (20) தெரியவந்தது. நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் அவர் இந்த தகவல் அறிந்ததும் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி ஊருக்கு புறப்பட்டார்.

அந்த பஸ் ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஆட்களை ஏற்றி இறக்கி விட்டு சென்றதால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் பஸ்சை வேகமாக இயக்கக்கோரி டிரைவரிடமும், கண்டக்டரிடமும் வாக்குவாதம் செய்துள்ளார்.

தொடர்ந்து ரெட்டார்குளம் விலக்கு பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கிய மணிகண்டன் கல்லால் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தார். பின்னால் அந்த மற்றொரு அரசு பஸ்சின் கண்ணாடியையும் கல்லால் தாக்கி உடைத்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பாலம்மாள் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் ‘எனது கணவர் இறந்த பின்னர் சடையநேரியில் உள்ள வீட்டை என்னுடைய பெயருக்கு எழுதி தருமாறு மாமியார் மகராசியிடம் கேட்டேன். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக கடந்த 4-10-2018 அன்று நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசாரும் எனக்கு ஆதரவு கொடுக்கவில்லை.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்தேன். எனது பெயருக்கு வீட்டை எழுதி தராமல் மாமியார் என்னை ஏமாற்றிவிட்டார்’ என எழுதி இருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்