தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி பயணம்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
சென்னை,
மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று கூடியது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்துக்கு வருகை தந்தனர்.
இந்த கூட்டத்தின் முடிவில், தமிழக சட்டசபையில் மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
கஜா புயலால் பாதிக்கப்பட்டு உள்ள தமிழகத்தின் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் சீரடையவில்லை. தொடர்ந்து நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மத்திய குழுவும் தமிழகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு அறிக்கை தயார் செய்து சென்றுள்ளது.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் இருந்து நாளை மதியம் டெல்லிக்கு விமானத்தில் பயணம் மேற்கொள்கிறார்.
அதன்பின் நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர்
சந்திக்க உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. இந்த சந்திப்பிற்கு பின் அவர் நாளை மாலையே டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.