போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஷால் கைது

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டை அகற்ற முயன்று, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஷால் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-20 06:30 GMT
சென்னை,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக நடிகர் விஷால் பதவி வகித்து வருகிறார். அவருக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த தயாரிப்பாளர்கள் நேற்று சென்னை தியாகராயநகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகம் முன்னால் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

விஷால் பதவி விலக வேண்டும் என்றும், பொதுக்குழுவை உடனே கூட்டவேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன் போராட்டம் நடத்தியவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் சங்க அலுவலகத்தின் வாயில் கதவை இழுத்து மூடி பூட்டு போட்டனர். 

இந்த நிலையில், இன்று காலை தயாரிப்பாளர் சங்க அலுவலகம் வந்த விஷால்,  எதிர்தரப்பால் போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றபோது காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து விஷால் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்