மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழா தொடங்கியது

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழா தொடங்கியது.

Update: 2019-01-27 06:39 GMT
மதுரை,

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெறுகிறது.  இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.  இதற்காக அவர் விமானம் வழியே மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்து உள்ளார்.

அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

இதேபோன்று பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களான முரளிதரராவ், எச். ராஜா, இல. கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

இதன்பின்னர் விமான நிலையத்தில் இருந்து அடிக்கல் நாட்டும் இடத்திற்கு அவர் புறப்பட்டார்.  மதுரை மண்டேலா நகரில் அடிக்கல் நாட்டும் மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி சால்வை அணிவித்து மரியாதை தெரிவித்ததுடன், மீனாட்சி அம்மன் சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.

இந்த விழாவில் மத்திய மந்திரிகள் நட்டா, பியூஸ் கோயல், தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்