தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழைக்கான அறிகுறி எதுவும் இன்றி, வறண்ட வானிலை நிலவி வருகிறது. அதே சமயத்தில் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் அடுத்த 2 இரவுகள் உறை பனி தொடரும். சென்னையை பொறுத்தமட்டில் வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.