ஈரோடு வன பகுதியில் பேருந்தை நோக்கி வந்த யானை கூட்டம்; அச்சத்தில் உறைந்த பயணிகள்
ஈரோடு வன பகுதியில் பேருந்தை நோக்கி வந்த யானை கூட்டத்தினை கண்டு பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வன பகுதியில் அமைந்த சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த பேருந்து பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா நோக்கி சென்றது.
அது வன பகுதி என்பதனால் திடீரென யானை கூட்டம் ஒன்று சாலையின் குறுக்கே வந்தது. அவை தங்களை நோக்கி வந்த பேருந்தினை கண்டது. பேருந்தில் இருந்த ஓட்டுனர் யானை கூட்டம் வருவது கண்டு உடனடியாக பயணிகளுக்கு எச்சரிக்கை கொடுத்து உள்ளார். பேருந்தினையும் நிறுத்தி விட்டார்.
அவரது எச்சரிக்கையை அடுத்து உள்ளே இருந்த பயணிகள் தங்களது ஜன்னல்களை மூடி கொண்டனர்.
தொடர்ந்து, பேருந்தை நோக்கி யானைகள் வந்தன. அவை நெருங்க நெருங்க பேருந்தில் அமர்ந்து இருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்து விட்டனர். யானைகள் தலையை அசைத்தபடியே அருகில் வந்து நீண்ட நேரம் அங்கேயே நின்றன.
அதன்பின் அவை பின்னோக்கி சென்றன. பின்னர் அங்கிருந்து யானைக்கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன்பின்பே பேருந்து அங்கிருந்து புறப்பட்டது. இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.