ஆண்டிப்பட்டியில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் பறிமுதல் - வருமானவரித் துறையினர்
ஆண்டிப்பட்டியில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித் துறையினர் தெரிவித்தனர்.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்த தகவல்களை வருமானவரித்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
வருமானவரித்துறையினர் இது தொடர்பாக கூறியதாவது, “ ஆண்டிப்பட்டியில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதம் இருந்த பணங்களை அங்கு ஏற்பட்ட கலவரத்தால் பலர் எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். ஆண்டிப்பட்டியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய ரூ.2 கோடி வந்து உள்ளதாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஒரு தபால் வாக்குச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சோதனை இன்று காலை 5 மணி அளவில் முடிந்துவிட்டது. 94 சிறு பாக்கெட்டுகளில் இருந்த பணம் பறிமுதல். ஒவ்வொரு பாக்கெட்டிலும் வாக்காளரின் பெயர் மற்றும் 300 ரூபாய் பணம் என எழுதப்பட்டிருந்தது. கைப்பற்றப்பட்ட பணம் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.