நான் சிங்கப்பூருக்கு செல்லவில்லை மண்டியா தான் எனக்கு சிங்கப்பூர் நடிகை சுமலதா பேட்டி
நான் சிங்கப்பூருக்கு செல்லவில்லை, மண்டியா தான் எனக்கு சிங்கப்பூர் என்று நடிகை சுமலதா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
நான் சிங்கப்பூருக்கு செல்லவில்லை, மண்டியா தான் எனக்கு சிங்கப்பூர் என்று நடிகை சுமலதா தெரிவித்துள்ளார்.
சுமலதா பேட்டி
மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியும், மண்டியா தொகுதி சுயேச்சை வேட்பாளருமான சுமலதா, நேற்று மண்டியாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மண்டியா மக்களுடன் இருப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன். அரசியல் செய்ய வரவில்லை. எனக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியவர்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள். இது சரியல்ல. தேர்தலின்போது எது நடந்தாலும், அதனை அத்துடன் விட்டுவிட வேண்டும். தேர்தலுக்கு பிறகும் அந்த பிரச்சினையை தொடர்ந்து வருகிறார்கள். எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு மிரட்டல் வருகிறது. இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளேன்.
மண்டியா தான் சிங்கப்பூர்
எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். முக்கியமாக பெண்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறேன். அவர்கள் நான் வெற்றி அடைய கடுமையாக உழைத்தனர். எனக்கு ஆதரவு அளித்த பிரதமர் மோடி மற்றும் மண்டியா மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நான் சிங்கப்பூரில் இருப்பதாக வதந்தியை பரப்புகிறார்கள். நான் மண்டியாவில் தான் உள்ளேன். மண்டியா தான் எனக்கு சிங்கப்பூர்.
இவ்வாறு அவர் கூறினார்.