கமல்ஹாசன் மீது முட்டை, செருப்புகள் வீச்சு: பா.ஜனதா நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்கு

கமல்ஹாசன் மீது முட்டை, செருப்புகள் வீசிய பா.ஜனதா நிர்வாகி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2019-05-17 20:55 GMT
கரூர்,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது ‘இந்து தீவிரவாதி’ என கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அவரது பேச்சுக்கு அவர் மறுப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக, வரலாற்று உண்மையைத்தான் சொன்னேன் என மீண்டும் அவர் பேசினார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் நேற்று முன்தினம் 2-ம் கட்டமாக அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 4 இடங்களில் திறந்த வேனில் சென்று கமல்ஹாசன் அக்கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். இறுதியாக அன்று இரவு வேலாயுதம்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

முட்டை-செருப்புகள் வீச்சு

பிரசாரத்தை முடித்துக் கொண்டு 10 மணிக்கு மேடையை விட்டு கமல்ஹாசன் கீழே இறங்கியபோது, அவரை நோக்கி 3 பேர் கும்பல் முட்டை, செருப்புகளை வீசியது. அவை அவர் மீது படாமல் மேடையில் விழுந்தன. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் பாதுகாப்பாக வேனில் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதற்கிடையே முட்டை, செருப்புகள் வீசியதாக நெரூர் அருகே உள்ள மறவாபாளையத்தை சேர்ந்த பாரதீய ஜனதா ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் (வயது 25) என்பவரை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பின்னர் ராமச்சந்திரனை வேலாயுதம்பாளையம் போலீசார் மீட்டு, போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

5 பிரிவுகளில் வழக்கு

இதுகுறித்து வேலாயுதம் பாளையம் போலீசில், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகியான கவிஞர் சினேகன் புகார் கொடுத்தார். அதன்பேரில், ராமச்சந்திரன் மீது இ.பி.கோ. சட்டப்பிரிவு 506 (2) (கொலை மிரட்டல்), 355 (கலகம் விளைவித்தல்), 147, 148 (பொது அமைதிக்கு விரோதமான குற்றங்கள்) மற்றும் 163 (ஏ) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

கைதான ராமச்சந்திரன் இரவோடு இரவாக கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான 2 பேர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்