அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஓட்டு போட்டு விட்டு திரும்பிய 2 பேர் திடீர் சாவு

அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் ஓட்டு போட்டு விட்டு திரும்பிய 2 பேர் திடீரென இறந்தனர்.

Update: 2019-05-19 23:34 GMT
கரூர்,

கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 49). தி.மு.க. கிளை செயலாளர். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னிலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று காலை வாக்களித்து விட்டு சக்திவேல் வெளியே வந்தார்.

அப்போது திடீரென அவர் நெஞ்சை பிடித்து கொண்டு மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக சக்திவேலை ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 60), கூலி தொழிலாளி. இவர் நேற்று மதியம் சிலோன் காலனி பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட சென்றார்.

அவர் ஓட்டுப்போட்டு விட்டு வெளியே வந்தார். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரம் சென்றபோது, திடீரென மாடசாமி மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஆனால் அதற்குள் மாடசாமி பரிதாபமாக இறந்து விட்டார்.

மேலும் செய்திகள்