ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததால் தம்பதி தற்கொலையா? ஒரே கயிற்றில் பிணமாக தொங்கினர்

ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததால் கணவன் மனைவி ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2019-05-21 20:53 GMT
மதுரை,

மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டை என்.ஜி.ஓ. காலனி, அன்னை தெரசா காலனியில் வசித்து வந்தவர் வெங்கடசுப்பிரமணியன் (வயது 40). அவருடைய மனைவி மீனாட்சி (36). காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு குழந்தை இல்லை. வெங்கடசுப்பிரமணியன் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் அதே பகுதியில் தொழில் முனைவோருக்கான பயிற்சி மையம் வைத்து நடத்தி வந்தார். கடன் பிரச்சினையால் மனவேதனையில் வெங்கடசுப்பிரமணியன் இருந்து வந்தாக தெரிகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று வெங்கடசுப்பிரமணியனும், அவரது மனைவி மீனாட்சியும் வீட்டினுள் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்கள் தற்கொலை செய்து 2 நாட்களுக்கு பிறகு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வந்து வெங்கடசுப்பிரமணியன் வீட்டை திறந்து பார்த்தபோது தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர்கள் கடன் பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால், வெங்கடசுப்பிரமணியன் ஆன்லைனில் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததாகவும், அதனால் ஏற்பட்ட கடனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவியது. எனவே இதுதொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்