சொத்தை அபகரிக்க முயற்சி: டி.ஜி.பி. அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்

தஞ்சையைச் சேர்ந்தவர் ஜீவஜோதி. இவரது கணவர் கொல்லப்பட்ட வழக்கில் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜீவஜோதி, தண்டபாணி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார்.

Update: 2019-06-19 00:16 GMT
அடையாறு,

சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று வந்த ஜீவஜோதி, புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், ‘வியாபார தேவைக்காக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வீட்டை அதே ஊரைச்சேர்ந்த ஓய்வுபெற்ற சார்பதிவாளர் ஒருவரிடம் கடந்த ஆண்டு அடமானமாக வைத்து ரூ.10 லட்சம் கடன் பெற்றோம். கடனை திருப்பிக்கொடுத்து விட்டு பத்திரத்தை கேட்டபோது தகாத வார்த்தைகளால் திட்டி எனது கணவரை தாக்கி கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். போலீசில் எங்கள் மீது பொய் புகார் கொடுத்துள்ளார். அவருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகிறார்கள். எங்கள் சொத்தை அபகரிக்க முயற்சி நடக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜீவஜோதி, ‘நாங்கள் மிரட்டப்படும் விவகாரத்தில் அரசியல் தலையீடு உள்ளது. எனது பாதுகாப்பை கருதி தற்போது அந்த நபரின் பெயரை சொல்லவில்லை. ஆனால் மீண்டும் பிரச்சினை வரும் என்றால் அந்த நபரின் பெயரை வெளியிடுவேன்’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்