தண்ணீர் பிரச்சினையை காரணம்காட்டி விடுமுறை அறிவித்தால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
தனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என கூறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தண்ணீர் பிரச்சினை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்த பின்பே அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
சில பள்ளிகள் தண்ணீர் பிரச்சினை காரணமாக மூடப்படுவதாக தகவல் வெளியாகிறது. இது விதிகளுக்கு முரணானது. பள்ளிகள் மூடப்படுகிறதா என்பதை கண்காணிக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என கூறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி இல்லாத தனியார் பள்ளிகளின் தடையின்மை சான்று ரத்து செய்யப்படும்.
அரசு பள்ளிகளில் எவ்வித கட்டணமும் வாங்காமல் அனைத்து வசதிகளையும் செய்து தரும் நிலையில், தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்ய முடியும் என கூறினார்.