அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கனிமொழி டுவிட்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-07-11 05:03 GMT
அண்ணா நூற்றாண்டு நூலகம் சரியாக பராமரிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், நூலகம் சரியாக பராமரிக்கப்படவில்லை என கூறி ஊடக செய்தி வெளியான நிலையில், நூலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தி.மு.க. எம்.பி. கனிமொழி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.  அதில், நூலகம் பூட்டப்பட்ட நிலையில் உள்ள படமொன்றையும் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள உனிஸ் அலி சாகிப் தெருவில் கழிவுநீர் வெளியேறி தேங்கிய நிலையில் உள்ள படமொன்றையும் வெளியிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை உயர்நீதிமன்றம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சரியாக பராமரிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்ட பின்னரும், அந்நூலகம், பராமரிப்பின்றி இருக்கிறது என்று, ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.  அரசு உடனடியாக தலையிட்டு, நூலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்