அதிவேகத்தால் விபத்து பஸ் சக்கரத்தில் சிக்கி 2 பெண் என்ஜினீயர்கள் உடல் நசுங்கி பலி மோட்டார் சைக்கிளை ஓட்டிய வாலிபர் படுகாயம்

சென்னை நந்தனத்தில் வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பெண் என்ஜினீயர்கள் பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2019-07-16 23:50 GMT
சென்னை,

ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் புஜ்ஜி பாபு. இவரது மகன் சிவா(வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரி. சிவா சென்னை வேளச்சேரியில் தங்கியிருந்து எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சிவா தன்னுடன் பணிபுரியும் என்ஜினீயர்களான பவானி(23), நாகலட்சுமி(22) ஆகியோருடன் தனது மோட்டார் சைக்கிளில் வேளச்சேரியில் இருந்து எழும்பூர் நோக்கி சென்றார்.

ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரில், சிவா மட்டும் ஹெல்மெட் அணிந்திருந்தார். மோட்டார் சைக்கிள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அருகே அண்ணாசாலையில் வந்தபோது, அந்த வழியாக சென்ற மாநகர பஸ்சை சிவா இடதுபுறமாக முந்தினார். அப்போது திடீரென சந்துக்குள் இருந்து ஆட்டோ ஒன்று வந்தது. இதைக்கண்ட சிவா நிலைதடுமாறி பஸ் மீது மோதினார்.

உடல் நசுங்கி பலி

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பவானி, நாகலட்சுமி மற்றும் சிவா மீது மாநகர பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பவானி மற்றும் நாகலட்சுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சிவா பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.



விரைந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் பவானி மற்றும் நாகலட்சுமியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த சிவாவுக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெஞ்சை பதற வைக்கும் காட்சி

இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார் சிவா அதிவேகமாக வந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பஸ் டிரைவர் குணசேகரன்(41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான நெஞ்சை பதற வைக்கும் இந்த விபத்து காட்சி, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

மேலும் செய்திகள்