ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு

ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்துள்ளது.

Update: 2019-08-18 18:48 GMT
பென்னாகரம்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உபரிநீர் திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 12-ந் தேதி வினாடிக்கு 3 லட்சம் கனஅடிக்கு மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்ததால் ஒகேனக்கல் வெள்ளக்காடானது.

இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் மீண்டும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் நடைபாதையை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இதனிடையே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நேற்று 11-வது நாளாக நீடித்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 29 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து காவிரி டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 10,500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் அளவை விட நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 113 அடியை எட்டிய நிலையில், நேற்று இரவு மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்