கூவத்தை சுத்தப்படுத்த மு.க.ஸ்டாலினும், மா.சுப்பிரமணியனும் வெளிநாடு சென்று வந்தார்களே? கூவம் சுத்தமாகி விட்டதா? - அமைச்சர் ஜெயக்குமார்
கூவத்தை சுத்தப்படுத்த மு.க.ஸ்டாலினும், மா.சுப்பிரமணியனும் வெளிநாடு சென்று வந்தார்களே? கூவம் சுத்தமாகி விட்டதா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
சென்னையில் ரூ.200 கோடி மதிப்பிலான மீன்பிடி துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா முயற்சியில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளை கொண்டு வந்துள்ளோம் என்பது குறித்து பட்டிமன்றம் நடத்த அதிமுக தயார். விவாதத்திற்கு எதிரணியினர் தயாரா?
அதிமுக ஆட்சியில் தான் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வந்தன.வெளிநாட்டு முதலீடுகள் இன்னும் நிறைய வர இருக்கின்றன. முதலமைச்சருக்கு, ஸ்டாலின் பாராட்டு விழா நடத்துவார் என நம்புகிறேன்.
தி.மு.க. ஆட்சியின் போது கூவத்தை சுத்தப்படுத்த மு.க. ஸ்டாலினும், மா. சுப்பிரமணியனும் வெளிநாடு சென்று வந்தார்களே? கூவம் சுத்தமாகி விட்டதா?
தி.மு.க.வினர் வெளிநாடு சென்றது தொடர்பாக வெள்ளை மனதுடன் அறிக்கை தர வேண்டும். முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியும், ஸ்டாலினும் கூட தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்று வந்துள்ளனர்.
தம் மீது குற்றத்தை வைத்து கொண்டு அடுத்தவர்களை குற்றம்சாட்டுவதா?வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு என்பதை திறந்த மனதோடு பாராட்ட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் தான் வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் வந்துள்ளன. எனவே ஸ்டாலின் பாராட்டு விழா நடத்தினால் ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்க வசதியாக இருக்கும் என கூறினார்.