ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டெல்லியில் தமிழக போலீஸ் அதிகாரி தீவிர விசாரணை - குற்றவாளிக்கு வலைவீச்சு

சென்னை ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளர் சி.குமரப்பனுக்கு கடந்த 16-ந்தேதி வெடிகுண்டு மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.

Update: 2019-09-24 22:00 GMT
சென்னை,

மேற்கு டெல்லி, மோதிநகர், சுதர்சன் பார்க் பகுதியை சேர்ந்த ஹர்தர்ஷன்சிங் நாக்பால் என்பவர் பெயரில் வந்த அந்த கடிதத்தில், ‘தான் சர்வதேச காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன் என்றும், தன் மகனுடன் சேர்ந்து சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வருகிற 30-ந்தேதி பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைக்கப் போவதாகவும்’ கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன், போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதற்காக உதவி கமிஷனர் விஜயராவலு தலைமையில் தனிப்படை டெல்லிக்கு சென்றுள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள முகவரியில், ஹர்தர்ஷன்சிங் நாக்பால் என்பவர் வசித்து வருகிறார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரது உறவினர் அவரை சிக்கலில் சிக்க வைப்பதற்காக இதுபோன்ற கடிதத்தை எழுதியுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உறவினரை டெல்லி போலீசாரின் உதவியுடன், தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்