தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை மையம்

புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

Update: 2019-09-30 10:15 GMT
சென்னை,

சென்னை மாநகரில் அண்ணா சாலை , ஆயிரம் விளக்கு , நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது.

கும்பகோணத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது. தாராசுரம், வலங்கைமான், அம்மாசத்திரம், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. சம்பா நெல் நடவுக்கு இந்த மழை பயன் தரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

நாகை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. வேளாங்கண்ணி, கீழ்வேளூர், கீழையூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் விடிய விடிய மழை நீடித்தது. இதன் காரணமாக வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, கடமலைக்குண்டு, வெள்ளிமலை,  மேகமலை ஆகிய மலைப்கிராமங்களில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 

ராமேசுவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சாலைகள் முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழை காரணமாக ராமேசுவரத்தில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்  புவியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம்  ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் -13 செ.மீ., நீலகிரி குந்தா அணையில் -11 செ.மீ.,நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கையில் 7-9 செ.மீ. மழை பெய்துள்ளது. 

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், கடந்த 102 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சராசரியாக 247.1 மி.மீ., மழை பெய்துள்ளது. இது வழக்கமாக பெய்யும் மழை அளவை விட 48 சதவீதம் அதிகம். அத்துடன் 1901ம் ஆண்டிற்கு பிறகு அதிக அளவில் பதிவான 3வது மழை அளவும் இதுவே ஆகும் என கூறினார்.

மேலும் செய்திகள்