மக்களைப்பற்றி கவலைப்படாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் பேச்சு
மக்களைப்பற்றி கவலைப்படாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாங்குநேரி,
நாங்குநேரி தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு “கை” சின்னத்தில் ஆதரவு கோரி நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட அரியகுளத்தில் நடந்த திண்ணை பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
உள்ளாட்சி தேர்தலை இந்த அரசு வேண்டுமென்றே நடத்தாமல் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்படும். புதிய தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் முதல்வரும், அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு சென்று ஊர் சுற்றி வருகின்றனர்.
மக்களைப்பற்றி கவலைப்படாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வந்துள்ளதால் அமைச்சர்கள் வருவார்கள். மற்ற நேரத்தில் மக்கள் குறையை கேட்க வர மாட்டார்கள். திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கிய கடன் தற்போது வழங்கப்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.