படப்பை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் கைது

படப்பை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-10-09 22:31 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த கீழ் படப்பையில் வண்டலூர்- வாலாஜாபாத் சாலை அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியை மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணித்தனர். படப்பை பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பது கண்காணிப்பில் தெரியவந்தது. இது குறித்து அவர்கள் மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

கைது

அப்போது ஏ.டி.எம். மையத்திற்குள் கையுறைகள் போட்டு கொண்டு கியாஸ் வெல்டிங் எந்திரம் வைத்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துக்கொண்டிருந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் தனியார் பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் காஞ்சீபுரத்தை சேர்ந்த இறையன்பு (வயது 19) மற்றும் 17 வயதான மற்றொரு மாணவர் என்பது தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய கருவிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்