மோடி, சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு: தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றி எடப்பாடி பழனிசாமி அறிக்கை

மோடி, சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளித்த தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-12 23:00 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலக நாடுகளின் பார்வை

பாரம்பரியம் மற்றும் பண்பாடுமிக்க தமிழகத்தை குறிப்பாக சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தை இந்திய-சீன நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு தேர்ந்தெடுத்த பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக மக்களின் சார்பில் முதற்கண் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உலக அரங்கில் நமது நாட்டின் பெருமையை உயர்த்தி, இன்று உலக தலைவர்களுக்கு இடையே உயர்ந்த தலைவராக விளங்கும் பிரதமர் நரேந்திர மோடி, இந்த செய்கையின் மூலம் தமிழகத்தின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தி உள்ளார். இது உலகநாடுகளின் பார்வையை தமிழகம் பக்கம் திருப்பி உள்ளது.

உற்சாக வரவேற்பு

இந்த இரு பெரும் தலைவர்களுக்கு (மோடி, சீனஅதிபர் ஜின்பிங்) உற்சாகமான வரவேற்பு அளித்த தமிழக மக்களுக்கு, குறிப்பாக மாணவச்செல்வங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

நம் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளின் மூலம் இருபெரும் தலைவர்களை மகிழ்வித்ததோடு மட்டுமல்லாமல் அனைவரையும் மகிழ்வித்த கலைஞர் பெருமக்களுக்கும் எனது நன்றி. இந்த கலைநிகழ்ச்சிகளை நல்ல முறையில் ஏற்பாடு செய்த அமைச்சர்களுக்கும் எனது நன்றி. சிறப்பான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட காவல்துறையினருக்கு எனது நன்றி.

மனமார்ந்த நன்றி

அனைத்து ஏற்பாடுகளையும் சிறந்த முறையில் ஒருங்கிணைத்த வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ் சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்