திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்? வெவ்வேறு தகவல்களால் போலீசார் குழப்பம்

திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்? என்பது தொடர்பான வெவ்வேறு தகவல்களால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.

Update: 2019-10-14 23:00 GMT
திருச்சி, 

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி சுவரை துளையிட்டு கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றது போலீசாருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. இதுதொடர்பாக திருவாரூரில் மணிகண்டன் என்பவர் சிக்கினார். அவருடன் வந்த சுரேஷ் தப்பியோடினார்.

மணிகண்டனிடம் விசாரணை நடத்தியதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் என்பது தெரியவந்தது. இதற்கிடையே சுரேஷ், திருவண்ணாமலை கோர்ட்டிலும், திருவாரூர் முருகன் பெங்களூரு கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.

மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்டம் குருவித்துறை பகுதியை சேர்ந்த கணேசனை (வயது 35) போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து 6 கிலோ 100 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 22¾ கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

நகைக்கடையில் கொள்ளையர்கள் திருடியது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த 2 மாதங்களுக்கு முன்பே நகைக்கடைக்கு நகைகள் வாங்குவது போல வந்துள்ளனர். கடைக்குள் நுழைய ஏதுவாக எங்கே இடம் உள்ளது? என்பதை அவர்கள் நோட்டமிட்டிருக்கின்றனர். இதில் தான் கடையின் இடது புறத்தை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். சுவரில் ஒரே நாளில் அவர்கள் துளை போடவில்லை. 3 அல்லது 4 நாட்களாக கொஞ்சம், கொஞ்சமாக சுவரில் கடப்பாரை மூலமாக துளையிட்டுள்ளனர்.

கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பும், பின்பும் அவர்கள் எந்த செல்போனும் பயன்படுத்தவில்லை. அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் போது வழக்கமாக வாக்கி-டாக்கி பயன்படுத்துவது உண்டு. சென்னையில் ஒரு கொள்ளை வழக்கில் வாக்கி-டாக்கி பயன்படுத்தியதில் திருவாரூர் முருகன் கைதானார். இதனால் திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தின்போது வாக்கி-டாக்கி பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர். அதற்கு பதிலாக கயிறை பயன்படுத்தி உள்ளனர்.

நகைகளை கொள்ளையடித்த பின் காரில் தான் தப்பிச்சென்றனர். கொள்ளையடித்த நகைகளில் முருகன் தனக்கு 2 மடங்கை எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இந்த கொள்ளை சம்பவத்திற்கு பின் பெங்களூருவில் நிரந்தரமாக தங்கிவிட திருவாரூர் முருகன் திட்டமிட்டிருந்தார். முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பின் தான் மேலும் விவரங்கள் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்துள்ள கொள்ளையன் முருகன் மீது தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொள்ளை வழக்குகள் உள்ளன. கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தில் தனக்கு பிரித்த பங்கில் சிலவற்றை சினிமா தயாரிப்பில் பயன்படுத்தி வந்ததும், மேலும் சில நடிகைகளுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகையின் பெயர் அடிபடுவதால் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறுகையில், தமிழ் சினிமாவில் பிரபல இளம்வயது நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது, என்றார். ஆளை பார்த்தால் நடிகையுடன் தொடர்பு இருக்குமா? முருகனிடம் நடிகைகள் தங்களது தரத்தை விட்டு கீழே இறங்கி பழகுவார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தான் எந்த நடிகைகளுடன் பழக்கம் உள்ளது என்பது தெரியவரும் என போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்