நடிகர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படத்துக்கு தடை கேட்டு வழக்கு இயக்குனர், தயாரிப்பாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படத்துக்கு தடை கேட்டு வழக்கு இயக்குனர், தயாரிப்பாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு அளித்துள்ளது.

Update: 2019-10-15 22:34 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், செல்வா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து 256 பக்கங்கள் கொண்ட கதை ஒன்றை எழுதினேன். இந்த கதையை தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்திலும் பதிவு செய்துள்ளேன். இதை படமாக்க வேண்டும் என்பதற்காக பல தயாரிப்பாளர்களிடம் கதை சொன்னேன்.

இந்த நிலையில், நடிகர் விஜய், நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள ‘பிகில்‘ என்ற திரைப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதை என்னுடையது. இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படம் வெளியானால், எனக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த படத்தின் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும். அதுவரை இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி படத்தை தயாரித்துள்ள நிறுவனத்துக்கும், இயக்குனர் அட்லீக்கும் உத்தரவிட்டார். விசாரணையை இன்று (புதன்கிழமைக்கு) தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்