குழந்தை சுஜித்துக்கு முதல் அமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி
குழந்தை சுஜித்தின் படத்திற்கு முதல் அமைச்சர் பழனிசாமி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.
திருச்சி,
திருச்சி மணப்பாறை அருகே 25ந்தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் வில்சனை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்றன.
எனினும், அரசின் பல்வேறு கட்ட முயற்சிகள் பலனின்றி சுஜித் அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்து விட்டான் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதன்பின்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஐந்தாவது நாளில் 88 அடி ஆழத்தில் இருந்து குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டது. பின்பு முறைப்படி சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், குழந்தை சுஜித்தின் வீட்டிற்கு முதல் அமைச்சர் பழனிசாமி நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்பு குழந்தை சுஜித்தின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.
அவருடன் சென்ற துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் சுஜித்தின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.