திருச்சியில் தோழியிடம் அத்துமீற முயன்றவர்களை தடுத்த கல்லூரி மாணவர் ஆற்றில் வீச்சு
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் திட்டில் தோழியிடம் அத்துமீற முயன்ற கும்பலை தடுத்த கல்லூரி மாணவர் ஆற்றில் தூக்கி வீசப்பட்டார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் திட்டில் அமர்ந்து கல்லூரியில் படிக்கும் காதல் ஜோடி ஒன்று தனிமையில் பேசி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அங்குள்ள 5 இளைஞர்கள், கல்லூரி மாணவியிடம் அத்துமீற முயன்றனர்.
இதனை தடுக்க முயன்ற காதலன் ஜீவித்தை இந்த கும்பல் தாக்கியது. பின்பு அவரை கொள்ளிடம் ஆற்றின் ஆழமான பகுதியில் தூக்கி வீசி விட்டு தப்பி ஓடியது. இளைஞர்களிடம் இருந்து தப்பி பிழைத்த மாணவி, கொள்ளிடம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி தஞ்சம் அடைந்தார்.
அந்த மாணவி அளித்த புகாரின் பேரில், தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் கொள்ளிடம் ஆற்றில் மாணவர் ஜீவித்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.