தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது -முதல் அமைச்சர் வேண்டுகோள்

தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சாதன துறை மாநாட்டில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்க கூடாது என கேட்டுக்கொண்டார்.

Update: 2019-11-07 06:16 GMT
சென்னை,

சென்னை நந்தம்பாக்கத்தில் சர்வதேச தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சாதன துறை தொடர்பான 2 நாள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு கடந்த ஆண்டு நான் தொழில் அதிபர்களை கேட்டுக் கொண்டேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முதலீடு செய்துள்ள, முதலீடு செய்ய முன்வரும் தொழிற்துறையினருக்கு நன்றி. முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி அழைக்கும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது.

புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. மிகப்பெரிய நிறுவனங்களின் கிளைகளும் சென்னையில் உள்ளன.

கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ரூ.6 ஆயிரத்து 500 கோடி முதலீடு கிடைத்துள்ளது.  தமிழகத்தில் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மாநில தகவல் குடும்ப தொகுப்பு உருவாக்கப்படும்.

அதிக அளவில் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட் குறைப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது  என கூறினார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இன்போசிஸ் நிறுவனம் செலவினங்களை குறைத்து வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கி உள்ளது. சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

காக்னிசன்ட் நிறுவனம், செலவினங்களை குறைக்கும் வகையில் சமீபத்தில் 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்த நிலையில், தற்போது இன்போசிஸ் நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கி உள்ளது.

இதை தொடர்ந்து தான் முதல்வர் பழனிசாமி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்து உள்ளார்.

மேலும் செய்திகள்