‘பப்ஜி’ இணைய விளையாட்டை தடை செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

வன்முறையை வளர்க்கும் ‘பப்ஜி’ இணைய விளையாட்டை தடை செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2019-11-10 23:15 GMT
சென்னை,

தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் ‘பப்ஜி’ எனப்படும் இணைய விளையாட்டு வேகமாக பரவி வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலத்தை இந்த விளையாட்டு கேள்விக்குறியாக்குவது கவலையளிக்கிறது.

உலகம் முழுவதும் ‘பப்ஜி’ விளையாட்டை 53 கோடி பேர் விளையாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 6 கோடிக்கும் அதிகமாகும். மது, போதை மருந்து ஆகியவற்றை விட ‘பப்ஜி’ விளையாட்டு மிகவும் ஆபத்தானது என்று கூறும் உளவியல் வல்லுனர்கள், இந்த விளையாட்டு உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

ஏற்கனவே, டிக்-டாக் போன்ற இணைய செயலிகள் கலாசார சீர்கேட்டை விளைவிக்கின்றன. அதையே நம்மால் கட்டுப் படுத்த முடியாத நிலையில், ‘பப்ஜி’ போன்ற விளையாட்டுகளும் கட்டற்று அனுமதிக்கப்பட்டால் அதன் மோசமான விளைவுகளை நம்மால் தாங்க முடியாது. எனவே, ‘பப்ஜி’ விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். தேசிய அளவில் தடை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்