கன மழை - வெள்ளம் நிவாரண பணிகள் ; அமைச்சர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு

மழை-வெள்ளம் மீட்பு, நிவாரண பணிகளை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-12-02 08:52 GMT
சென்னை,

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக கனமழை பெய்த நிலையில், சாலைகளில் தண்ணீர் தேங்கின. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. இன்றும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்புப்பணிகள், நிவாரண பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார் ,உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 

அப்போது மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கிய முதலமைச்சர்,   பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினரை அனுப்ப தயார் நிலையில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்