பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : செல்வப்பெருந்தகை

பாஜக ஆட்சியில் அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

Update: 2024-04-27 11:02 GMT

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தென்மாநிலங்களிடையே குறிப்பாக தமிழ்நாட்டிற்கு கடுமையான பாரபட்சத்துடன் நிதி ஒதுக்கப்பட்டு வருவதை எதிர்த்து கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தியிருக்கிறோம்.

கடந்த டிசம்பர் 2023 இல் மிக்ஜம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ள பாதிப்புக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.38,000 கோடி நிதி ஒதுக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர். பாலு தலைமையில் கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்கள்.

மத்திய குழு அறிக்கை வந்ததும் சில நாட்களில் நிதி ஒதுக்கப்படும் என்று உள்துறை மந்திரி கூறினார். ஆனால், அவர் கூறியபடி நிதி ஒதுக்கப்படவில்லை. நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு தேசிய பேரிடராக இதனை அறிவிக்க முடியாது என்று கூறினார்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் மிக்ஜம் புயல் நிவாரண நிதியாக ரூ.115.49 கோடியும், டிசம்பர் மாத வெள்ள நிவாரண நிதியாக ரூ.160.61 கோடியும் ஆக மொத்தம் ரூ.276.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.682.63 கோடி. இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள இருப்பு தொகையான ரூ.406.57 கோடியை கழித்தது போக மீதியுள்ள தொகையான ரூ.276.10 கோடி தான் தற்போது தமிழ்நாட்டிற்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.

நாம் கேட்ட நிவாரண நிதி ரூ.38,000 கோடி. ஆனால், மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஏற்கனவே இருந்த 406.57 கோடியை விடுவித்து மீதியுள்ள ரூபாய் 276.10 கோடியை தான் தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதியாக மத்திய அரசு வழங்கியுள்ளது.

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை ஒதுக்காமல் மாநில பேரிடர் நிவாரண நிதியாக ஏற்கனவே இருக்கிற தொகையை கழித்து விட்டு மீதி தொகையை உள்துறை அமைச்சகம் ஒதுக்கியிருப்பது மத்திய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

இதன் மூலம் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் நாம் கேட்ட தொகையை ஒதுக்க மத்திய பாஜக அரசு மறுத்தது தெளிவாக தெரிகிறது. இந்த ஒதுக்கீடு யானைப் பசிக்கு சோளப்பொரி போட்டது போல் இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண நிதி வழங்காத பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக பேசுவது அப்பட்டமாக நீலிக் கண்ணீர் வடிப்பதாகத் தான் கருத முடியும்.

தமிழக மக்கள் மீதோ, தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான் பிரதமர் மோடி கையாண்டு வருகிறார் என்பதற்கு உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு மேலும் உறுதி செய்கிறது. இத்தகைய வஞ்சிக்கிற மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்