வடகிழக்கு பருவ மழை : சென்னையில் 14 செமீ குறைவு ; தமிழகம் முழுவதும் இயல்பை விட அதிகம்
சென்னையில் வடகிழக்கு பருவ மழை 14 செமீ குறைவாக பெய்து உள்ளது. தமிழகம் முழுவதும் இயல்பை விட அதிகமாக பெய்து உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறினார்.
சென்னை,
சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குனர் புவியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை.
அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 5 செமீ மழை பதிவாகி உள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் குமரி கடல் பகுதிக்கு 2 நாளைக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவ மழை 14 செமீ குறைவாக பெய்து உள்ளது. தமிழகம் முழுவதும் இயல்பை விட அதிகமாக பெய்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.