கந்து வட்டிக்காக பொக்லைன் மூலம் வீடு இடித்து தகர்ப்பு

கந்து வட்டிக்காக பெண்ணின் வீடு பொக்லைன் மூலம் இடித்து தகர்க்கப்பட்டது.

Update: 2019-12-14 23:17 GMT
மதுரை,

மதுரை செல்லூர், கொன்னவாயன் சாலை, சிங்கம்பிடாரிகோவில் தெருவை சேர்ந்தவர் குமார். அவருடைய மனைவி பரமேசுவரி(வயது 40). இவர் மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர், 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். அதே தெருவில் குடியிருக்கும் என்ஜினீயர் நாகராஜ் என்பவரிடம் எனது கணவர் கடந்த 2014-ம் ஆண்டு ரூ.2 லட்சம் வட்டிக்கு வாங்கியிருந்தார். அதற்கு வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து மற்றும் எனது வீட்டின் மூலப்பத்திரம், மாமியார் பெயரில் இருக்கும் சொத்தின் அசல் பத்திரத்தையும் வாங்கி கொண்டார். அந்த கடனுக்கு நான் மாதாமாதம் கந்து வட்டி செலுத்தி வந்தேன். திடீரென்று எனது குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் வட்டியை செலுத்த முடியவில்லை. இதனால் எனது குடும்பத்தினர் அனைவரையும் அவர் மிரட்டி வந்தார்.

வீடு இடிப்பு

இந்த நிலையில் நாகராஜ் 10 பேருடன் எனது வீட்டிற்கு வந்தார். எனது மாமியாரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டினார்கள். பின்னர் அவர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் எனது வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள். வீ்ட்டில் இருந்த பீரோ, கட்டில், தையல் எந்திரம், மகள்களின் 2 மடிக்கணினிகளை வெளியே தூக்கி எறிந்து விட்டனர். வெளியில் சென்று இருந்த நான் தகவல் அறிந்து வீட்டிற்கு விரைந்து வந்தேன்.

அவர்களிடம் எனது வீட்டை இடிக்காதீர்கள் என்று கெஞ்சினேன். ஆனால் அவர்கள் மிரட்டல் விடுத்தனர். அவர்களால் எனது உயிருக்கும், எனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது

அந்த புகார் மனு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன்தேவாசீர்வாதம், செல்லூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் என்ஜினீயர் நாகராஜ் உள்பட 11 பேர் மீது செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் அந்த பகுதியில் பதுங்கி இருந்த நாகராஜ்(48), விளாங்குடியை சேர்ந்த அவரது நண்பர் செந்தில்குமரன்(46) ஆகியோரை கைது செய்தார். இந்த சம்பவம் தொடர்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்