ஈழத்தமிழர்களுக்கு பா.ம.க. துரோகமா? மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் ராமதாஸ் பதில்

ஈழத்தமிழர்களுக்கு பா.ம.க. துரோகம் செய்து விட்டது என்ற மு.க.ஸ்டாலின் கேள்விக்கு, டாக்டர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.

Update: 2019-12-18 22:20 GMT
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப்பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஈழத்தமிழர்களுக்கு பா.ம.க. துரோகமிழைத்து விட்டதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு துணை நின்றதுடன், அதற்கு கூலியாக மத்திய அமைச்சரவையில் கூடுதல் துறைகளை பெற்றுக்கொண்ட தி.மு.க., ஈழத்தமிழர் நலன் குறித்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமானது.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்ததன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைப்பதை பா.ம.க. தடுத்து விட்டது என்பது தான் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டு ஆகும். ஈழத்தமிழர்களின் தேவை இந்தியக்குடியுரிமை அல்ல. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் குடியுரிமை பெற்று விட்டால், அதன் பின்னர் ஈழத்திற்கு திரும்ப முடியாது; தங்களின் தாயகமான ஈழத்தை நிரந்தரமான இழந்து விடுவோம் என அஞ்சுகின்றனர்.

அதேநேரத்தில் என்றாவது ஒரு நாள் தாயகம் திரும்ப இயலும் என்று நினைக்கும் ஈழத்தமிழர்கள், அதுவரை தமிழகத்தில் தாங்கள் கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோருகின்றனர். அதனால் தான் ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அவர்களுக்கு எத்தகைய குடியுரிமை வேண்டும் என்பதை, அவர்களின் விருப்பம் அறிந்து அதற்கேற்றவாறு தீர்மானிக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று இப்போது முழங்கும் தி.மு.க., தங்கள் ஆட்சியின் போது தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களை மரியாதையுடனாவது நடத்தியதா?. தி.மு.க.வைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் நலனுக்காக எதையும் செய்ததும் இல்லை.... செய்யப்போவதும் இல்லை.

உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க அஞ்சி, தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்திற்கு கஜினி முகமதுவைப் போன்று படையெடுத்த தி.மு.க., இப்போது ஒரு சில இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்பதற்காக ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்களைப் போல நடிக்கிறார்கள். தி.மு.க.வின் இந்த புதிய நாடகம் தமிழக மக்களிடம் எடுபடாது; தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். ஈழத்தமிழர்களுக்கு தி.மு.க. இழைத்த துரோகங்கள் குறித்து பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு நான் தயார், மு.க.ஸ்டாலின் தயாரா?.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்