ராமநாதபுரத்தில் இருந்து சென்னை வந்த “வேனை நடுவழியில் நிறுத்தி விடைத்தாள்களை திருத்தினார்கள்” குரூப்-4 தேர்வில் நடந்த முறைகேடு பற்றி பரபரப்பு தகவல்கள்

ராமநாதபுரத்தில் இருந்து சென்னை வந்த வேனை நிறுத்தி குரூப்-4 தேர்வு விடைத்தாளை திருத்திய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-01-25 23:56 GMT
ராமநாதபுரம்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வில் பெருமளவில் முறைகேடு நடந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர் ராமநாதபுரம் வந்து விசாரித்ததில் மோசடி உறுதி செய்யப்பட்டு, அதன் அறிக்கை டி.ஜி.பி.யிடம் வழங் கப்பட்டது. பின்னர் இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து நேற்று முன்தினம் 3 பேரும், நேற்று ஒருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

இதுதவிர ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில்தான் இந்த முறைகேடு நடந்திருப்பது தெரியவந்ததால், அதன் பெறுப்பாளர்களான 2 தாசில்தார்களிடம் சென்னையில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி பற்றி நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டு அதற்கேற்ப செயல்பட்டு, கச்சிதமாக அரங்கேற்றி உள்ளதும் அம்பலமாகி உள்ளது.

கீழக்கரை, ராமேசுவரத்தை தேர்வு செய்தது ஏன்?

புரோக்கர்கள் மற்றும் ஒரு பிரபல பயிற்சி மையத்தின் ஆலோசனையின்படியே ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ராமேசுவரம் மையங்களை மோசடிக்கு பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி அவர்களை அணுகிய தேர்வர்களுக்கு ஆலோசனை அளித்து அந்த மையங்களை தேர்வு செய்ய வைத்துள்ளனர். இவர்களில் அந்த பயிற்சி மையத்தில் பயின்றவர்களா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த மோசடிக்காக பணம் கொடுத்த தேர்வர்களுக்கு, அரசு வேலை உத்தரவாதம் அளித்து அதன் அடிப்படையில் தகவல் கசியாமல் பார்த்துக்கொள்ளுமாறு உறுதிபடுத்தி, அதன்பின்னரே தேர்வு எழுத அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரசு வேலை உறுதி என்பதால் தேர்வர்களும் தகவல்களை வெளியாகாமல் பார்த்துக்கொண்டனர். இதுபோன்ற நபர்கள்தான் தற்போது குரூப்-4 தேர்வில் சர்ச்சைக்குரிய வெற்றியாளர்களாக வலம் வந்து வழக்கிலும் சிக்கி உள்ளனர்.

திதியை காரணம் காட்டினர்

இந்த முறைகேடு அம்பலமாக தொடங்கியதும் புரோக்கர்களும், இதில் தொடர்புடைய அதிகாரிகளும் உஷாரானார்கள். பணம் கொடுத்து வெற்றி பெற்ற தேர்வர்களை அவசரமாக அழைத்து, யாராவது உங்களிடம் விசாரணைக்கு வந்தால், வெளி மாவட்டங்களை சேர்ந்த நீங்கள் ராமேசுவரம், கீழக்கரையை ஏன் தேர்வு செய்தீர்கள்? என்ற கேள்வியைத்தான் முதலில் எழுப்புவார்கள். அப்போது, ராமேசுவரத்தை காரணம் காட்டி திதி கொடுக்க வந்ததாக தேர்வர்களை ஒட்டுமொத்தமாக கூற வைத்துள்ளனர்.

அதிகாரிகள் விசாரித்தபோது அனைவரும் திதி என்ற காரணத்தை ஒரு சேர தெரிவித்ததும் சிக்குவதற்கு ஒரு காரணமாகிவிட்டது. இதுதவிர பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்கள் என சந்தேகம் எழுந்த தேர்வர்களின் திறமையை பரிசோதிக்க நடந்த மறுதேர்வில், யாரும் சிறிதளவு கூட சரியான விடைகளை எழுதவில்லை என்றும் கூறப்படுகிறது.

தேர்வு அறிவிப்புக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்த மோசடிக்காக அதிகாரிகள், பணியாளர்கள், புரோக்கர்கள் பணியாற்றி பெருந்தொகையை பேசி தேர்வர்களிடமும் முன்பணமும் பெற்றுள்ளனர். இதற்காக அவர்கள் செல்போன், வாட்ஸ்அப் போன்ற தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் மீண்டும் தொடர்பு கொள்ள முடியாதவாறு தரைவழி தொலைபேசி வழியாகவே அனைத்து ஆலோசனைகள், உத்தரவுகளை பிறப்பித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆதாரங்களுடன் சிக்கமாட்டோம் என்ற எண்ணத்தில் முன்ஏற்படாக இருந்து இவ்வாறு செயல்பட்டுள்ளனர்.

தாமதமாக சென்ற வேன்

தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் அனைத்தும் சென்ற விதம், வழித்தடம், நேர வித்தியாசம் போன்றவை குறித்து தேர்வாணைய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ராமநாதபுரம் கருவூலத்தில் இருந்து வினாத்தாள் மற்றும் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் சார்கருவூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதே போன்று தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் சார்கருவூலத்திற்கு வந்து அங்கிருந்து ஒரே நேரத்தில் சென்னை நோக்கி சென்றுள்ளன

இதற்காக 6 வேன்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதில் விடைத்தாள்கள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மோசடி வெளிச்சத்திற்கு வந்தபின்னர் நடந்த விசாரணையின்போது, இதுபற்றிய விவரங்களை வழித்தட சோதனை சாவடி, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரித்தபோது 6 வேன்களில் ஒரு வேன் மட்டும் காலதாமதமாக சென்னைக்கு சென்றதாக விசாரணை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக சென்றடையும் நேரத்தை விட அதிக தாமதமாக சென்ற அந்த ஒரு வேன் குறித்து அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகம் எழுந்தது. அந்த வேன் குறித்து விசாரித்தபோது அது கோவையை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு உரியது என தெரியவந்துள்ளது.

திசை மாறியது

இந்த வேன் ராமநாதபுரத்தில் இருந்து சரியாக சென்றுகொண்டிருந்த நிலையில் சென்னைக்கு முன்பாக ஒரு இடத்தில் திசைமாறி ஒதுக்குபுறமாக சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது. யாருடைய உத்தரவின் அடிப்படையில் இந்த வாகனம் திசைமாறி சென்றது என்று தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதன்மூலம் சிலர் குறித்த ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களிடம் விரைவில் விசாரணை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த வாகனம்தான் மேற்கண்ட சர்ச்சைக்குரிய மையங்களின் விடைத்தாள்களை எடுத்து சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விடைத்தாள்கள் திருத்தம்

இதன்படி பார்த்தால் மேற்கண்ட தேர்வு மையங்களில் ஏற்கனவே திட்டமிட்டவாறு தேர்வர்கள் சிறிது நேரத்தில் அழியும் மையினால் கொண்ட மேஜிக் பேனாவால் விடைத்தாள்களில் தங்களுக்கு தெரிந்த விடைகளை குறித்து கொடுத்துள்ளனர். இந்த விடைத்தாள்களை ஏற்றிக்கொண்டு வந்த வேன் சென்னைக்கு முன்பாக நடுவழியில் ஒரு இடத்தில் நிறுத்தி, அங்கு வைத்து விடைத்தாள்களை திருத்தி மீண்டும் கட்டுகளுக்குள் வைத்து அனுப்பி இருக்கிறார்கள். சினிமா காட்சிகளையே மிஞ்சும் வகையில் செயல்படுத்தி கூட்டு முயற்சியுடன் இந்த பெரும் முறைகேட்டை செய்துள்ளனர். இதில் பயிற்சி மையத்தினர், புரோக்கர்கள், சில உயர் அதிகாரிகள், பணியாளர்கள் என பலரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதால் இந்த மோசடியில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த மோசடி புகாரில் சிக்கி உள்ள 2 தாசில்தார்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவிடம் கேட்டபோது, “2 தாசில்தார்களையும் விசாரணைக்காக அழைத்து செல்வது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.

கோரிக்கை

தோண்டத் தோண்ட பரபரப்பு தகவல்கள் வெளியாகி வரும் குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ராமநாதபுரம் மாவட்டம் முக்கிய இடம் பிடித்துள்ளது.

எனவே இதற்கு முன்னர் நடந்துள்ள தேர்வுகளிலும் தவறுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதுதொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்