7 பேர் விடுதலை; கவர்னர் நல்ல முடிவை எடுத்திடுவார்: முதல் அமைச்சர் பழனிசாமி
7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் நிச்சயம் நல்ல முடிவை எடுத்திடுவார் என முதல் அமைச்சர் பழனிசாமி சட்டசபையில் இன்று கூறியுள்ளார்.
சென்னை,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 9ந்தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை கவர்னர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இதுபற்றிய வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்தபொழுது, 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், ஆளுநருக்கு எங்களால் நேரடி அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் வழக்கை விசாரித்த நீதிபதி கூறினார்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநரிடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு மெத்தனம் காட்டுகிறது என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சட்டசபையில் இன்று பேசினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் சி.வி. சண்முகம் கூறும்பொழுது, தமிழக அரசு அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்தும் செய்து முடித்து விட்டோம். அமைச்சரவை முடிவு பற்றி அரசும், தமிழக ஆளுநரிடம் தெரிவித்து விட்டது.
இனி ஆளுநரே முடிவு எடுக்க வேண்டும். ஆளுநரின் அதிகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது என கூறினார். இதேபோன்று தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளை விரைவில் விடுவித்தது பற்றி துரைமுருகன் கேள்வி எழுப்பியதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் சி.வி. சண்முகம், 3 மாணவிகளை எரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றவாளிகள் செயல்படவில்லை என சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்து விட்டது என்று கூறினார்.
இதன்பின்னர் அவையில் பேசிய தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவை எடுத்திடுவார். நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். அதற்காகவே காத்திருக்கிறோம் என்று கூறினார்.